தமிழகத்தின் 234 சட்டப்பேரவை தொகுதிகளிலும் ஒரே கட்டமாக இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. மொத்தம் 5.73 கோடி வாக்காளர்கள் தங்கள் ஜனநாயகக் கடமையை ஆற்றுவதற்காக காலை 7 மணி முதலே வாக்குச்சாவடிகளுக்கு திரண்டு வருகின்றனர். பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் தங்கள் வாக்குகளை பதிவு செய்து வருகிறார்கள்.
இந்நிலையில், கோவை அரசு கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடியில் வாக்காளர்களை வரவேற்க “Tina” எனப்படும் ரோபோ பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த ரோபோ பட்டுப் பாவாடை அணிந்து, கையில் தாம்பாள தட்டில் ரோஜா பூக்கள் மற்றும் சாக்லேட்டுகள் வைத்து வாக்காளர்களை அன்புடன் வரவேற்கிறது.
வாக்காளர்கள் வாக்குச்சாவடிக்குள் நுழையும் போது, ரோபோ சிரித்த முகத்துடன் அவர்களை வரவேற்று சாக்லேட் வழங்குவது காண்போருக்கு புதுமையான அனுபவமாக அமைந்துள்ளது. இந்நிகழ்வு வாக்காளர்களிடையே ஆர்வத்தையும் உற்சாகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
தேர்தல் காலங்களில் வாக்காளர்களை ஊக்குவிக்கும் வகையில் பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் நிலையில், கோவையில் இடம்பெற்ற இந்த ரோபோ வரவேற்பு முயற்சி சமூக வலைதளங்களிலும் பரவலாக பேசப்படுகிறது.
தொழில்நுட்பத்தை பயன்படுத்தி வாக்காளர்களை ஈர்க்கும் இந்த முயற்சி, தேர்தல் விழிப்புணர்வை புதிய கோணத்தில் கொண்டு சென்றுள்ளது
