கடந்த 2021-ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் கிலோ கணக்கில் தங்க நகைகளை அணிந்து, ஹெலிகாப்டரில் வந்து வாக்கு சேகரித்து நாடு முழுவதும் கவனம் ஈர்த்த ஹரி நாடார், தற்போது மீண்டும் தேர்தல் களத்தில் குதித்துள்ளார். வங்கி மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டு சென்னை புழல் சிறையில் இருக்கும் அவர், இந்தத் தேர்தலில் போட்டியிட மாட்டார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், வழக்கறிஞர்கள் மற்றும் தனது ஆதரவாளர்கள் மூலம் தென்காசி மாவட்டம் ஆலங்குளம் தொகுதியில் வேட்புமனுத் தாக்கல் செய்துள்ளார். சத்திரிய சான்றோர் படை கட்சியின் நிர்வாகிகள் அவரது சார்பாகத் தேர்தல் அலுவலகத்தில் மனுவைச் சமர்ப்பித்துள்ளனர்.
தனது வேட்புமனுவில் ஹரி நாடார் குறிப்பிட்டுள்ள சொத்து விவரங்கள் அனைவரையும் மலைக்க வைத்துள்ளன. தன்னிடம் சுமார் 17 கோடி ரூபாய் மதிப்புள்ள 11.5 கிலோ தங்க நகைகள் இருப்பதாகவும், ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான சொகுசு கார்கள் உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். மேலும், தன் மீது தற்போது 24 வழக்குகள் நிலுவையில் இருப்பதையும் அவர் வெளிப்படையாகக் குறிப்பிட்டுள்ளார். கடந்த தேர்தலில் ஆலங்குளம் தொகுதியில் சுயேச்சையாகப் போட்டியிட்ட இவர், சுமார் 37,000 வாக்குகளைப் பெற்று திமுக மற்றும் அதிமுக ஆகிய இரு பெரும் கட்சிகளுக்கும் கடும் சவாலை ஏற்படுத்தி மூன்றாம் இடத்தைப் பிடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது சிறையில் இருந்துகொண்டே அவர் போட்டியிடுவது தென்காசி மாவட்ட அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
