திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி சட்டப்பேரவைத் தொகுதிக்கான வேட்புமனு தாக்கல் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், அங்கு அரசியல் நாகரிகத்தையும் தாண்டிய ஒரு சுவாரசியமான நிகழ்வு அரங்கேறியுள்ளது. நேற்று திமுக வேட்பாளர் டி.ஜே. கோவிந்தராஜன் தனது வேட்புமனுவைத் தாக்கல் செய்துவிட்டு அலுவலகத்தில் இருந்து வெளியே வந்தபோது, அதிமுக வேட்பாளர் சுதாகர் மனுத் தாக்கல் செய்வதற்காக உள்ளே சென்றார். அப்போது இருவரும் நேருக்கு நேர் சந்தித்துக் கொண்ட நிலையில், யாரும் எதிர்பாராத விதமாக திமுக வேட்பாளர் கோவிந்தராஜனின் காலில் விழுந்து அதிமுக வேட்பாளர் சுதாகர் ஆசி பெற்றார்.
தேர்தல் களத்தில் இரு துருவங்களாக மோதிக்கொள்ளும் கட்சிகளின் வேட்பாளர்கள் மத்தியில் நடந்த இந்தச் சம்பவம், அங்கு கூடியிருந்தவர்களிடையே பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. இருப்பினும், தங்கள் கட்சி வேட்பாளரின் இந்தச் செயல் அங்கிருந்த அதிமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியையும் சலசலப்பையும் உண்டாக்கியுள்ளது. கும்மிடிப்பூண்டி தொகுதியில் திமுக, அதிமுக மற்றும் தவெக வேட்பாளர்கள் இடையே மும்முனைப் போட்டி நிலவி வரும் சூழலில், இந்தச் சம்பவம் சமூக வலைதளங்களில் விவாதப் பொருளாக மாறியுள்ளது.
