தமிழ்நாட்டின் முதலமைச்சராக ஜோசப் விஜய் இன்று பதவியேற்ற நிலையில் தேர்தல் வாக்குறுதிகளில் மூன்று திட்டங்களுக்கு அவர் விழா மேடையிலேயே கையெழுத்திட்டார். அதில் 200 யூனிட் மின்சாரம் தள்ளுபடி தொடர்பான அறிவிப்பில் பல வதந்திகளும், குற்றச்சாட்டுகளும் முன்வைக்கப்பட்டு வருகிறது. அதனைப் பற்றி காணலாம்.
2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் விஜயின் தமிழக வெற்றிக் கழகம் 108 தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றியது. பெரும்பான்மை இல்லாத நிலையில் விடுதலை சிறுத்தைகள், இந்திய கம்யூனிஸ்ட், இந்திய யூனியன் முஸ்லிம் லீக், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், காங்கிரஸ் ஆகிய கட்சிகள் ஆதரவு கொடுக்க 120 எம்எல்ஏக்கள் ஆதரவுடன் விஜய் முதலமைச்சராக இன்று பதவியேற்றுள்ளார்.
விஜயைத் தொடர்ந்து ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, வெங்கட்ரமணன், செங்கோட்டையன், அருண்ராஜ், ராஜ்மோகன், சி.டி.ஆர் நிர்மல் குமார், டி.கே.பிரபு, கீர்த்தனா ஆகிய 9 பேரும் அமைச்சர்களாக பொறுப்பேற்றனர். சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் மிக பிரம்மாண்டமாக இந்த நிகழ்ச்சி நடைபெற்ற நிலையில் விழா மேடையிலேயே மூன்று திட்டங்களுக்கான ஆவணங்களில் விஜய் கையெழுத்திட்டு இன்ப அதிர்ச்சி கொடுத்தார்.
விஜய் மோசடி வாக்குறுதி கொடுத்தாரா?
அதில் இரண்டு மாதங்களுக்கு 500 யூனிட் வரை பயன்படுத்தும் தகுதியுள்ள குடும்பங்களுக்கு 200 யூனிட் மின்சாரம் இலவசம் என தெரிவித்திருந்தார். தேர்தல் வாக்குறுதியில் விஜய் அனைத்து வீடுகளுக்கும் 200 யூனிட் மின்சாரம் இலவசமாக வழங்குவதாக தெரிவித்துவிட்டு இப்போது இப்படி கூறுகிறாரே என சமூக வலைதளங்களில் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது.
மேலும் இதுவரை தமிழ்நாடு அரசால் வழங்கப்பட்டு வந்த 100 யூனிட் இலவசம் மின்சார திட்டமும் இத்துடன் நிறுத்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டது. இதற்கு தமிழக வெற்றிக் கழக தொண்டர்கள் கடுமையான பதிலடி கொடுத்தனர். உண்மையில் தமிழக வெற்றி கழகத்தின் தேர்தல் அறிக்கையில் தகுதியுள்ள வீடுகளுக்கு 200 யூனிட் மின்சாரம் இலவசமாக வழங்கப்படும் என்பது மட்டுமே தெரிவிக்கப்பட்டு இருந்தது.
அது மட்டுமல்லாமல் அந்தத் தகுதியாக 500 யூனிட் வரை பயன்படுத்துபவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே சமயம் முந்தைய அரசில் அமல்படுத்தப்பட்ட 100 யூனிட் மின்சாரம் இலவசம் என்கிற திட்டம் 500 யூனிட் தாண்டி பயன்படுத்துபவர்களுக்கு பொருந்தும் எனவும் கூறப்பட்டுள்ளது.
ஆனால் விஜய் பதவியேற்ற நொடி முதல் அவரைப் பற்றிய வதந்திகளும் குற்றச்சாட்டுகளும் சமூக வலைதளங்களில் ரெக்கை கட்டி பறக்கிறது. பதவியேற்பு விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து மூன்றாவதாக இசைக்கப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. ஆனால் ஆளுநர் மாளிகை ஏற்பாடு செய்த விழாவில் மத்திய அரசின் நிகழ்ச்சி நிரல் படி முதலில் வந்தே மாதரம், இரண்டாவதாக தேசிய கீதம், மூன்றாவதாக தான் தமிழ் தாய் வாழ்த்து இசைக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்க விஷயமாகும்.
