2026 சட்டமன்றத் தேர்தலில் மக்கள் நீதி மய்யம் போட்டியிடாமல் திமுக கூட்டணிக்கு நிபந்தனையற்ற ஆதரவு அளிப்பதாக அறிவித்துள்ள நிலையில், கமல்ஹாசனின் இந்த முடிவை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெகுவாகப் பாராட்டியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப் பதிவில், தனது அன்பிற்கும் பண்பிற்கும் உரிய நண்பரான கமல்ஹாசன், தற்போதைய அரசியல் சூழலில் தன்னலத்தைப் பின்னுக்குத் தள்ளி தமிழகத்தின் நலனை முன்னிறுத்தி எடுத்துள்ள இந்தப் பெருந்தன்மையான முடிவை வரலாறு என்றென்றும் போற்றும் என்று நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளார். அண்ணா அறிவாலயத்தில் தன்னைச் சந்தித்த கமல்ஹாசன், இது தியாகம் அல்ல கடமை என்று கூறியிருந்தாலும், உண்மையில் அவர் செய்திருப்பது மிகப்பெரிய தியாகம் தான் என்றும், இதற்கு எவ்வாறு நன்றி சொல்வதென்றே தெரியவில்லை என்றும் முதல்வர் உருக்கமுடன் தெரிவித்துள்ளார்.
இரு இயக்கங்களின் தலைவர்களாக மட்டுமின்றி, ஒரு நல்ல நண்பர்களாகத் தங்களுக்குள் கருத்துகளைப் பரிமாறிக் கொண்டதை நினைவுகூர்ந்த ஸ்டாலின், அமையவிருக்கும் 'திராவிட மாடல் 2.0' அரசு கமல்ஹாசனின் அன்பினாலும் உருவானது என்பதை இப்போதே அறிவிப்பதாகக் கூறியுள்ளார். மேலும், தேர்தல் களத்தில் மக்கள் நீதி மய்யத்தின் உறுப்பினர்கள் மற்றும் தொண்டர்களின் பங்களிப்பிற்குத் தனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொண்ட அவர், தமிழ்நாடு முழுவதும் கமல்ஹாசன் வலம் வந்து ஆதரவு திரட்ட வேண்டும் என்றும் அன்பான வேண்டுகோள் விடுத்துள்ளார். முன்னதாக, தொகுதிப் பங்கீட்டில் ஏற்பட்ட சில உடன்பாடற்ற சூழல்களால், தனது தொண்டர்களின் அடையாளமான 'டார்ச் லைட்' சின்னத்தை விட்டுக்கொடுக்க விரும்பாமலும், அதேசமயம் மதவாத சக்திகளை வீழ்த்த திமுகவின் வெற்றி அவசியம் என்பதாலும் தேர்தலில் நேரடியாகப் போட்டியிடப் போவதில்லை என கமல்ஹாசன் அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
