மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் மைத்துனரும், தற்போதைய தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் தாய்மாமாவுமான தட்சிணாமூர்த்தி, தனது 102 வயதிலும் சற்றும் சளைக்காமல் நேரில் வந்து வாக்களித்து அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளார். திருவாரூர் மாவட்டம், நன்னிலம் வட்டம், கோவில் திருமாளம் கிராமத்தைச் சேர்ந்த இவர், வயது முதிர்வையும் பொருட்படுத்தாமல் நேற்று அங்குள்ள வாக்குச்சாவடி மையத்திற்கு வருகை தந்து தனது ஜனநாயகக் கடமையை ஆற்றினார்.
தபால் வாக்கை மறுத்து வாக்குச்சாவடிக்கே வந்த வைராக்கியம்
100 வயதைக் கடந்த மூத்த குடிமக்களுக்குத் தேர்தல் ஆணையம் வீட்டிலிருந்தே வாக்களிக்கும் தபால் வாக்கு வசதியை வழங்கியிருந்தது. இது குறித்துத் தேர்தல் அதிகாரிகள் தட்சிணாமூர்த்தியிடம் கேட்டபோது, அதனை அவர் திட்டவட்டமாக மறுத்துவிட்டார். "தபால் வாக்கு வேண்டாம், நான் நேரடியாக வாக்குச்சாவடிக்கே வந்துதான் எனது வாக்கினைப் பதிவு செய்வேன்" என்று வைராக்கியத்துடன் கூறிய அவர், அதன்படியே நேரில் வந்து வாக்களித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழகத்தில் தற்போது நடைபெற்று வரும் திமுகவின் திராவிட மாடல் ஆட்சி இந்தத் தேர்தலுக்குப் பிறகும் நிச்சயமாகத் தொடரும் எனத் தனது நம்பிக்கையை வெளிப்படுத்தினார்.
