பரமக்குடியில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்ட தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த திமுக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்துப் பேசினார். அப்போது, சமீபத்தில் ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் டெல்லி அணியைத் தமிழ்நாடு அணி வீழ்த்தியதைச் சுட்டிக்காட்டிய அவர், அதேபோல் வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலிலும் டெல்லி அணியாகத் திகழும் பாஜகவை, தமிழ்நாடு அணி வீழ்த்த வேண்டும் என்று ருசிகரமாகக் குறிப்பிட்டார்.
மத்திய பாஜக அரசு தமிழகத்தின் உரிமைகளைப் பறிப்பதாகக் குற்றம் சாட்டிய முதல்வர், கச்சத்தீவை மீட்கத் தொடர்ந்து வலியுறுத்துவோம் என்று உறுதி அளித்தார். மேலும், திமுக மீண்டும் ஆட்சிக்கு வரும்போது மகளிர் உரிமைத் தொகை 2 ஆயிரம் ரூபாயாகவும், புதுமைப் பெண் திட்ட உதவித்தொகை 1,500 ரூபாயாகவும் உயர்த்தப்படும் என்றும், இல்லத்தரசிகளுக்கு 8 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான கூப்பன்கள் வழங்கப்படும் என்றும் புதிய வாக்குறுதிகளை வழங்கினார். முன்னதாக, எமனேசுவரம் பகுதியில் உள்ள நெசவாளர் ஒருவரின் இல்லத்திற்குச் சென்ற முதல்வர், அங்கு தறியில் அமர்ந்து நெசவு செய்ததோடு, தொழிலாளர்களின் குறைகளையும் கேட்டறிந்தார்.
