தமிழகச் சட்டமன்றத் தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி அமைத்து 27 தொகுதிகளில் போட்டியிடும் பாரதிய ஜனதா கட்சியின் வேட்பாளர் பட்டியலை, மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் இன்று அதிகாரப்பூர்வமாக வெளியிடுகிறார். தொகுதிப் பங்கீடு மற்றும் வேட்பாளர் தேர்வு தொடர்பான பல்வேறு கட்ட ஆலோசனைகளுக்குப் பிறகு, டெல்லி மேலிடத்தின் ஒப்புதலோடு இந்தப் பட்டியல் இறுதி செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக, முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலையின் போட்டி மற்றும் முக்கியத் தொகுதிகளுக்கான மும்முனைப் போட்டிகள் காரணமாக நிலவி வந்த இழுபறிக்கு இன்று முற்றுப்புள்ளி வைக்கப்பட உள்ளது. இன்று காலை சென்னை கமலாலயத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் இந்தப் பட்டியலை பியூஷ் கோயல் வெளியிடவுள்ள நிலையில், பாஜக தொண்டர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது.
இதற்கிடையே, செய்தியாளர்களிடம் பேசிய பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், திமுகவின் தேர்தல் அறிக்கையை மிகக் கடுமையாக விமர்சித்தார். திமுகவின் அறிக்கை 'ஹீரோ' அல்ல, அது ஒரு 'ஜீரோ' என்றும், தமிழகத்தில் போதைப்பொருள் புழக்கம் அதிகரித்துள்ளதைச் சுட்டிக்காட்டி அது 'ஹெராயின்' அறிக்கை என்றும் அவர் சாடினார். மேலும், நடிகர் விஜய்யின் பாதுகாப்பு குறித்த புகார்கள் குறித்துக் கருத்துத் தெரிவித்த அவர், சாதாரண மனிதனுக்கே பாதுகாப்பு இல்லாத சூழலில் இதைப் பெரிதுபடுத்தத் தேவையில்லை எனக் குறிப்பிட்டார். மற்றொரு முக்கிய நிகழ்வாக, புதுச்சேரி பிரச்சாரத்தை முடித்துக்கொண்டு இன்று இரவு சென்னை வரும் பிரதமர் மோடி, நாளை காலை பாஜக உயர்மட்டக் குழுவினருடன் ஆலோசனை நடத்துகிறார். அப்போது பாஜக வேட்பாளர்கள் அனைவரும் பிரதமரை நேரில் சந்தித்து வாழ்த்துப் பெற உள்ளனர்.
