தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான வேட்புமனுக்களைத் திரும்பப் பெறுவதற்கான கால அவகாசம் இன்று பிற்பகல் 3 மணியுடன் நிறைவடைந்ததைத் தொடர்ந்து, இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதில் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள அம்பாசமுத்திரம் தொகுதி, மாநிலத்திலேயே மிகக் குறைந்த எண்ணிக்கையிலான வேட்பாளர்கள் போட்டியிடும் தொகுதியாக மாறியுள்ளது. இத்தொகுதியில் பிரதான கட்சிகள் மற்றும் சுயேச்சைகள் என மொத்தம் 5 வேட்பாளர்கள் மட்டுமே அதிகாரப்பூர்வமாக களத்தில் உள்ளனர்.
நடப்பு எம்.எல்.ஏ இசக்கி சுப்பையா அதிமுக சார்பில் மீண்டும் போட்டியிட, அவரை எதிர்த்து காங்கிரஸ் சார்பில் வி.பி.துரை களம் காண்கிறார். இவர்களுடன் நாம் தமிழர் கட்சியின் நத்தம் சிவசங்கரன், தமிழக வெற்றிக் கழகத்தின் ராஜகோபால் மற்றும் பகுஜன் சமாஜ் கட்சியின் இசை கண்ணன் ஆகியோர் போட்டியில் உள்ளனர். தொகுதியில் செல்வாக்குமிக்கவராகக் கருதப்படும் இசக்கி சுப்பையாவிற்கும், முதல்முறை களம் காணும் தமிழக வெற்றிக் கழக வேட்பாளர் ராஜகோபாலுக்கும் இடையிலான போட்டி கள நிலவரத்தில் புதிய மாற்றங்களை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. 5 வேட்பாளர்கள் மட்டுமே உள்ளதால், இந்தத் தொகுதியின் தேர்தல் களம் தற்போது மாநில அளவில் கவனம் பெற்றுள்ளது.
