போக்குவரத்து பாதுகாப்புக்காக, நாட்டில் வாகன பதிவு முறையில் அவ்வப்போது பல்வேறு மாற்றங்கள் அமல்படுத்தப்பட்டு வருகின்றன. அந்த வகையில், அனைத்து வாகனங்களிலும் உயர் பாதுகாப்பு கொண்ட பதிவு எண் பலகை (HSRP – High Security Registration Plate) பொருத்துவது கட்டாயமாக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்துத் துறை மீண்டும் வலியுறுத்தியுள்ளது.
பழைய வாகன உரிமையாளர்கள் பலரும் இன்னும் பழைய நம்பர் பிளேட்டையே பயன்படுத்தி வருவது கவலைக்கிடமானதாக இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதனால், ஹெச்.எஸ்.ஆர்.பி நம்பர் பிளேட் பொருத்தாத வாகனங்களுக்கு கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படவுள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
HSRP நம்பர் பிளேட்
HSRP என்பது அரசால் வடிவமைக்கப்பட்ட உயர் பாதுகாப்பு பதிவு எண் பலகையாகும். இதில் லேசர் மூலம் பொறிக்கப்பட்ட தனித்துவமான அடையாள எண்கள், ஹோலோகிராம் ஸ்டிக்கர், எரிபொருள் வகையை காட்டும் நிற குறியீட்டு ஸ்டிக்கர்கள் போன்ற பல பாதுகாப்பு அம்சங்கள் இடம்பெற்றுள்ளன. இது வாகன திருட்டைத் தடுப்பதோடு, குற்றச் செயல்களில் ஈடுபடும் வாகனங்களை எளிதில் கண்டறிய உதவுகிறது.
புதிய விதிகள் மற்றும் அபராதங்கள்
HSRP பிளேட் இல்லாமல் வாகனம் இயக்கினால் முதன்முறை ரூ. 5,000 அபராதம்
என்றும் மறுமுறை ரூ.10,000 வரையும் அபராதம் செலுத்த வேண்டும். மேலும் மாசு கட்டுப்பாடு (PUC) சான்றிதழ் இல்லாமல் இயக்கினால் தனியாக ₹10,000 வரை அபராதம் விதிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், HSRP பிளேட் இல்லாத வாகனங்களுக்கு இனி PUC சான்றிதழ் பெறவும் அல்லது புதுப்பிக்கவும் முடியாது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பழைய வாகனங்களுக்கு கட்டாயம்
ஏப்ரல் 1, 2019க்கு பிறகு வாங்கப்பட்ட அனைத்து புதிய வாகனங்களிலும் HSRP பிளேட் ஏற்கனவே பொருத்தப்பட்டு வழங்கப்படுகிறது. ஆனால் அதற்கு முன்பு வாங்கப்பட்ட அனைத்து வாகனங்களிலும் இந்த பிளேட்டை மாற்றி பொருத்துவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
டிஜிட்டல் கண்காணிப்பு தீவிரம்
சாலைகளில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்கள் மற்றும் பெட்ரோல் பங்குகளில் உள்ள தானியங்கி ஸ்கேனிங் முறைகள் மூலம் வாகனங்களின் நம்பர் பிளேட்கள் சரிபார்க்கப்பட்டு, விதிமுறைகள் மீறப்பட்டால் அபராதம் நேரடியாக ஆன்லைன் மூலம் வாகன உரிமையாளர்களுக்கு அனுப்பப்படும் நடைமுறையும் விரைவில் அமலுக்கு வரும்.
ஆன்லைன் விண்ணப்பம்
HSRP நம்பர் பிளேட்டை ஆன்லைன் மூலம் பதிவு செய்ய, அரசு அங்கீகாரம் பெற்ற இணையதளங்களில் விண்ணப்பிக்கலாம். இருசக்கர வாகனங்களுக்கு ₹200 முதல் ₹500 வரை, நான்கு சக்கர வாகனங்களுக்கு ₹600 முதல் ₹1500 வரை கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. எரிபொருள் ஸ்டிக்கருக்கு கூடுதலாக சுமார் ₹100 செலுத்த வேண்டியிருக்கும்.
தமிழ்நாட்டில் நிலைமை
தமிழ்நாட்டில் இது இன்னும் முழுமையாக கட்டாயமாக அறிவிக்கப்படவில்லை. இருப்பினும், பிற மாநிலங்களில் நடைமுறையில் உள்ளதால் விரைவில் இதையும் அமல்படுத்த வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
வாகன உரிமையாளர்கள் தாமதிக்காமல் HSRP நம்பர் பிளேட்டை பொருத்திக் கொண்டு அபராதங்களைத் தவிர்க்க வேண்டும் என போக்குவரத்துத் துறை அறிவுறுத்தியுள்ளது.
