அமெரிக்கா - ஈரான் இடையே நிலவி வரும் போர் பதற்றம் காரணமாக, சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. இதன் எதிரொலியாக, இந்திய ரூபாயின் மதிப்பு இன்று (புதன்கிழமை) வர்த்தகத் தொடக்கத்திலேயே 69 பைசா சரிந்து, முன்னெப்போதும் இல்லாத வகையில் ஒரு அமெரிக்க டாலருக்கு எதிராக 92.18 ரூபாய் என்ற வரலாற்றுச் சரிவை எட்டியுள்ளது.
ஈரான் மீதான தாக்குதல் மற்றும் வளைகுடா நாடுகளில் நிலவும் சூழலால், பிரெண்ட் கச்சா (Brent Crude) எண்ணெய் விலை ஒரு பேரல் 82 டாலரைத் தாண்டியுள்ளது. இந்தத் திடீர் விலை உயர்வு முதலீட்டாளர்களிடையே பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளதால், அந்நியச் செலாவணி சந்தையில் ரூபாய் மதிப்பு கடும் அழுத்தத்திற்கு உள்ளாகியுள்ளது. முன்னதாக 92.05 ரூபாயாகத் தொடங்கிய வர்த்தகம், அடுத்த சில நிமிடங்களிலேயே 92.18 ரூபாயாக வீழ்ச்சியடைந்தது.
