மத்திய புள்ளியியல் துறை வெளியிட்டுள்ள தரவுகளின்படி, தமிழகத்தின் பொருளாதார முன்னேற்றம் என்பது திட்டமிடப்பட்ட இலக்கை நோக்கிய பயணத்தின் வெற்றி என முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்துள்ளார். இதனை உறுதிப்படுத்தும் விதமாகத் தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா, திராவிட மாடல் ஆட்சியின் பயனாகவே இந்த அசுர வளர்ச்சி எட்டப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். ஏற்கனவே தொழில் மற்றும் பொருளாதாரத்தில் வலுவாக இருக்கும் ஒரு மாநிலம், மீண்டும் இவ்வளவு வேகமான வளர்ச்சியைப் பதிவு செய்வது உலக அளவில் மிகவும் அரிதான ஒன்று என அவர் தனது சமூக வலைதளப் பக்கத்தில் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஒரு டிரில்லியன் டாலர் இலக்கை நோக்கி
முதலமைச்சர் மு.க. ஸ்டாலினின் கடுமையான உழைப்பால் கிடைத்துள்ள இந்த வளர்ச்சி விகிதம் இந்திய அளவில் மிக முக்கியமாகக் கருதப்படுகிறது. இதே போன்ற வேகமான வளர்ச்சி அடுத்த 15 முதல் 20 ஆண்டுகளுக்குத் தொடர்ந்தால், தென்கொரியா மற்றும் சீனா போன்ற நாடுகளின் பொருளாதார நிலைக்குத் தமிழகம் இணையான இடத்தைப் பிடிக்கும் என்று அமைச்சர் நம்பிக்கை தெரிவித்துள்ளார். 2030-ஆம் ஆண்டிற்குள் ஒரு டிரில்லியன் டாலர் பொருளாதார மாநிலமாகத் தமிழகத்தை மாற்றும் இலக்கை நோக்கி அரசு உறுதியாகப் பயணிப்பதாகக் குறிப்பிட்ட அவர், புதிய முதலீடுகள் மற்றும் வேலைவாய்ப்புகள் மூலம் இந்த வளர்ச்சி மேலும் வலுப்படும் எனத் தெரிவித்தார். தேர்தல் முடிவுகள் வெளியாக உள்ள சூழலில் வந்துள்ள இந்த அறிவிப்பு பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது.
