அமெரிக்கா மற்றும் ஈரான் நாடுகளுக்கு இடையே ஏற்பட்டுள்ள போர் சூழல் காரணமாக, சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு விநியோகத்தில் பெரும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதன் எதிரொலியாக இந்தியாவிற்கு இறக்குமதி செய்யப்படும் எரிவாயுவின் அளவு குறைந்துள்ளதால், சமீபத்தில் சிலிண்டர் விலையும் உயர்ந்தது. இந்தச் சூழலில், பொதுமக்களின் அத்தியாவசியத் தேவையான வீட்டு உபயோக சிலிண்டர்களுக்குப் பற்றாக்குறை ஏற்படாமல் இருப்பதை உறுதி செய்ய எண்ணெய் நிறுவனங்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.
கருப்பூர் ஆலையின் தற்போதைய நிலை
இதன் ஒரு பகுதியாக, சேலம் கருப்பூரில் செயல்பட்டு வரும் இந்தியன் ஆயில் நிறுவனத்தின் சிலிண்டர் நிரப்பும் ஆலையில், வர்த்தகப் பயன்பாட்டிற்கான (Commercial) சிலிண்டர்கள் உற்பத்தி தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. இங்கிருந்து தினசரி சுமார் 6,300 வர்த்தக சிலிண்டர்கள் விநியோகம் செய்யப்பட்டு வந்த நிலையில், தற்போது அவை முழுமையாக நிறுத்தப்பட்டுள்ளன. மாறாக, முன்னுரிமை அடிப்படையில் வீட்டு உபயோக சிலிண்டர்கள் மட்டுமே தற்போது விநியோகத்திற்கு அனுப்பப்பட்டு வருகின்றன.
பயனாளர்களுக்கு ஏற்பட்டுள்ள கட்டுப்பாடுகள்
எரிவாயு தட்டுப்பாடு காரணமாக வீட்டு உபயோக சிலிண்டர்களை முன்பதிவு செய்வதற்கான கால அவகாசம் தற்போது 25 நாட்களாக அதிகரிக்கப்பட்டுள்ளது. சேலம், தருமபுரி, ஓசூர் மற்றும் கள்ளக்குறிச்சி உள்ளிட்ட மாவட்டங்களுக்கு விநியோகம் செய்யப்படும் இந்த ஆலையில், நாளொன்றுக்கு சுமார் 14,000 வீட்டு உபயோக சிலிண்டர்கள் மட்டுமே தற்போது அனுப்பப்படுவதாகத் தமிழ்நாடு சமையல் எரிவாயு சிலிண்டர் லாரி உரிமையாளர்கள் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர். வர்த்தக சிலிண்டர் விநியோகம் நிறுத்தப்பட்டுள்ளதால் ஹோட்டல்கள் மற்றும் வணிக நிறுவனங்கள் பாதிக்கப்படும் சூழல் உருவாகியுள்ளது.
