உலகின் முன்னணி மென்பொருள் நிறுவனங்களில் ஒன்றான ஆரக்கிள் (Oracle), உலகளவில் சுமார் 30,000 ஊழியர்களைப் பணிநீக்கம் செய்து அதிரடி உத்தரவிட்டுள்ளது. பிில்லியனர் லாரி எலிசன் தலைமையிலான இந்த அமெரிக்க நிறுவனம், செவ்வாய்க்கிழமை அதிகாலை 6 மணிக்கே ஊழியர்களுக்குப் பணிநீக்க மின்னஞ்சலை அனுப்பி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவில் பலத்த அடி
இந்த ஆட்குறைப்பு நடவடிக்கையில் இந்தியப் பிரிவு கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் சுமார் 30,000 ஊழியர்களைக் கொண்டுள்ள ஆரக்கிள், தற்போது சுமார் 12,000 பேரை வேலையை விட்டு நீக்கியுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. குறிப்பாக, கிளவுட் அப்ளிகேஷன்ஸ் (Fusion Cloud), கிளவுட் இன்ஃப்ராஸ்ட்ரக்சர் (OCI), இன்ஜினியரிங் மற்றும் ஏஐ (AI/ML) ஆகிய பிரிவுகளில் பணியாற்றியவர்கள் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மின்னஞ்சலில் சொல்லப்பட்டது என்ன?
"நிறுவனத்தின் தற்போதைய வணிகத் தேவைகளைக் கருத்தில் கொண்டு, உங்கள் பணி நீக்கம் செய்யப்படுகிறது. இன்றுதான் உங்களின் கடைசி வேலை நாள்," என அந்த மின்னஞ்சலில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், அடுத்தகட்டத் தொடர்புகளுக்காக ஊழியர்களின் தனிப்பட்ட மின்னஞ்சல் முகவரிகளைக் கேட்டுள்ளது நிறுவனம். அடுத்த ஒரு மாதத்திற்குள் மற்றொரு கட்ட ஆட்குறைப்பு நடத்தவும் ஆரக்கிள் திட்டமிட்டுள்ளதாக பிடிஐ (PTI) செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
இழப்பீட்டுத் தொகுப்பு
இந்தியாவில் பாதிக்கப்பட்ட ஊழியர்களுக்குப் பின்வரும் சலுகைகளை நிறுவனம் வழங்கியுள்ளது:
- ஒரு வருடச் சேவையை முடித்தவர்களுக்கு 15 நாட்கள் சம்பளம்.
- ஒரு மாத நோட்டீஸ் பீரியட் (Notice Period) சம்பளம்.
- விடுப்பு ஊதியம் (Leave Encashment) மற்றும் கிராஜுவிட்டி.
- கூடுதலாக 'டாப்-அப்' தொகையாக இரண்டு மாதச் சம்பளம்.
அமெரிக்காவில் உள்ள ஊழியர்களுக்கு அதிகபட்சமாக 26 வாரங்கள் வரை அடிப்படைச் சம்பளம் இழப்பீடாக வழங்கப்படுகிறது.
காரணம் என்ன?
செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பக் கட்டமைப்பிற்காக அதிக முதலீடு செய்ய வேண்டியிருப்பதால், செலவுகளைக் குறைக்கும் நோக்கில் இந்த ஆட்குறைப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. மே 2025 நிலவரப்படி, ஆரக்கிள் நிறுவனத்தில் சுமார் 1,62,000 முழுநேர ஊழியர்கள் பணியாற்றி வந்தது குறிப்பிடத்தக்கது.
