நாடு முழுவதும் குழாய் வழி இயற்கை எரிவாயு கட்டமைப்பு உள்ள பகுதிகளில், இரட்டை எரிவாயு இணைப்புகளை (எல்பிஜி மற்றும் பிஎன்ஜி) படிப்படியாக ஒழிக்கும் நோக்கில் மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகம் புதிய கட்டுப்பாட்டைக் கொண்டு வந்துள்ளது. புதிய திருத்தப்பட்ட விதிமுறைகளின்படி, வீட்டில் குழாய் வழி எரிவாயு (PNG) இணைப்பு பெற்ற நுகர்வோர், அது பயன்பாட்டிற்கு வந்த 30 நாட்களுக்குள் தங்களிடம் உள்ள எல்பிஜி (LPG) சிலிண்டர் இணைப்பை அதிகாரப்பூர்வமாக ஒப்படைக்க வேண்டும்.
யுபிஐ பணப் பரிவர்த்தனையில் கூடுதல் பாதுகாப்பு
ஆன்லைன் பணப் பரிவர்த்தனைகளில் நடைபெறும் முறைகேடுகள் மற்றும் தவறுதலாக வேறு நபர்களுக்குப் பணம் அனுப்புவதைத் தடுக்கும் பொருட்டு, தேசிய கொடுப்பனவுக் கழகம் இன்று முதல் புதிய பாதுகாப்பு அம்சத்தைக் கட்டாயமாக்குகிறது. இதன்படி, கூகுள் பே, போன்பே, பேடிஎம் போன்ற செயலிகள் மூலம் ஒருவருக்குப் பணம் அனுப்பும்போது, பயனர்கள் தங்களது ‘யுபிஐ பின்' (UPI PIN) எண்ணை உள்ளிடுவதற்கு முன்பாகவே, பணம் பெறுபவரின் வங்கிக் கணக்கில் உள்ள அதிகாரப்பூர்வமான அசல் பெயர் திரையில் தோன்றும். இதன் மூலம் தவறான நபர்களுக்குப் பணம் மாறுவது முற்றிலும் தடுக்கப்படும்.
வங்கிச் சேவைக் கட்டணங்கள் உயர்வு
வங்கிகள் வழங்கும் மாதாந்திர இலவச ஏடிஎம் பரிவர்த்தனை வரம்புகள் (3 முதல் 5 முறை) இனி மிகக் கடுமையாகக் கண்காணிக்கப்படும். இந்த வரம்பை தாண்டிய பிறகு மேற்கொள்ளப்படும் பணம் எடுத்தல், மினி ஸ்டேட்மெண்ட் மற்றும் பேலன்ஸ் சரிபார்ப்பு போன்ற சேவைகளுக்கான கட்டணங்கள் உயர்த்தப்படவுள்ளன.
பான் கார்டு விதிகளில் புதிய தளர்வும் நிபந்தனையும்
வாடிக்கையாளர்களுக்குச் சாதகமான ஒரு மாற்றமாக, வங்கிக்கிளையில் ரூ.50,000 வரையிலான ரொக்க வைப்புத்தொகைக்கு பான் கார்டு எண்ணைக் குறிப்பிடுவதில் சில தளர்வுகள் வழங்கப்பட்டுள்ளன. எனினும், குடும்ப உறுப்பினர்களுக்கு வழங்கப்படும் உயர் மதிப்புள்ள பரிசுகள் மற்றும் ரூ.20 லட்சத்திற்கும் அதிகமான சொத்துப் பதிவுகளுக்கு பான் கார்டு எண் சமர்ப்பிப்பது தொடர்ந்து கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
Follow us on our official WhatsApp channel for breaking news alerts and updates!
