மத்திய கிழக்கு ஆசிய நாடுகளில் நிலவி வரும் போர் பதற்றம் காரணமாக, கடல்வழிப் போக்குவரத்துப் பாதிக்கப்பட்டுள்ளதால் முட்டை ஏற்றுமதி குறைந்துள்ளது. தற்போது ஒருசில கொள்கலன்கள் (Containers) மட்டுமே கப்பல்கள் மூலம் அனுப்பப்பட்டு வருகின்றன. இந்தச் சூழலைச் சமாளிக்க, கார்கோ விமானங்கள் மூலம் முட்டைகளை ஏற்றுமதி செய்வதற்கான தீவிர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகத் தமிழ்நாடு கோழிப்பண்ணையாளர்கள் சங்கச் செயலாளர் சுந்தர்ராஜன் மற்றும் ஏற்றுமதி சங்கச் செயலாளர் வல்சன் ஆகியோர் தெரிவித்துள்ளனர். போர்ச் சூழல் தணிந்தால் மட்டுமே மீண்டும் பழையபடி முட்டை ஏற்றுமதி சீராகும் என அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
பறவைக் காய்ச்சல் குறித்த விளக்கம்
ராசிபுரம் பகுதியில் உள்ள கோழிப்பண்ணை ஒன்றில் கோடை வெப்பத்தின் தாக்கம் காரணமாகவே கோழிகள் உயிரிழந்தன என்றும், மக்கள் பாதிக்கப்படாத வகையில் அவற்றை முறையாக அகற்ற அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் சங்க நிர்வாகிகள் விளக்கமளித்துள்ளனர். நாமக்கல் மண்டலத்தில் பறவைக் காய்ச்சல் பாதிப்பு ஏதுமில்லை என்பதை உறுதிப்படுத்திய அவர்கள், பண்ணைகளில் 21 நாட்களுக்கு ஒருமுறை கோழிகளின் இரத்த மாதிரிகள் எடுக்கப்பட்டுத் தொடர் ஆய்வுகள் மேற்கொள்ளப்படுவதாகவும் தெரிவித்தனர். இதன் காரணமாகவே எவ்விதத் தடையுமின்றி ஏற்றுமதி பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
