மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் இஸ்ரேல் - ஈரான் போர் சூழல், சர்வதேச கச்சா எண்ணெய் சந்தையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், இந்தியாவில் சமையல் எரிவாயு சிலிண்டர்களின் விலை அதிரடியாக உயர்த்தப்பட்டுள்ளது. பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள புதிய அறிவிப்பின்படி, வீட்டு உபயோகத்திற்கான 14.2 கிலோ எடையுள்ள சிலிண்டரின் விலை 60 ரூபாய் உயர்ந்துள்ளது. இதன் விளைவாக சென்னையில் ஒரு சிலிண்டரின் விலை 928.50 ரூபாயாகவும், டெல்லியில் 913 ரூபாயாகவும் அதிகரித்துள்ளது. இதேபோல் வணிக பயன்பாட்டிற்கான 19 கிலோ சிலிண்டர் விலை 115 ரூபாய் உயர்த்தப்பட்டு, சென்னையில் 2,043.50 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது. இந்த திடீர் விலை உயர்வு உணவகங்கள் மற்றும் சிறு தொழில்களில் உணவுப் பொருட்களின் விலை அதிகரிக்கக்கூடும் என்ற அச்சத்தை பொதுமக்களிடையே ஏற்படுத்தியுள்ளது.
போர் பதற்றத்தால் எரிவாயு தட்டுப்பாடு ஏற்படலாம் என அஞ்சி பொதுமக்கள் அதிக அளவில் சிலிண்டர்களை முன்பதிவு செய்வதைத் தவிர்க்க, எண்ணெய் நிறுவனங்கள் புதிய கட்டுப்பாடுகளை மீண்டும் அமல்படுத்தியுள்ளன. அதன்படி, அடுத்தடுத்த இரண்டு சிலிண்டர் முன்பதிவுகளுக்கு இடையே கட்டாயம் 21 நாட்கள் இடைவெளி இருக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. குறிப்பாக கொல்கத்தா போன்ற நகரங்களில் சிலிண்டர் முன்பதிவு 20 சதவீதம் வரை அதிகரித்துள்ள நிலையில் இக்கட்டுப்பாடு கொண்டுவரப்பட்டுள்ளது. இருப்பினும், மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி, நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு ஏதும் இல்லை என்றும், அடுத்த 50 நாட்களுக்குத் தேவையான இருப்பு நம்மிடம் உள்ளதாகவும் கூறி பொதுமக்களுக்கு நம்பிக்கை அளித்துள்ளார்.
