இந்திய ரயில்வே, ரயில் பயணிகளுக்காக புதிய தள்ளுபடி சலுகையை அறிவித்துள்ளது. ரயில் ஒன் செயலி மூலம் முன்பதிவு செய்யப்படாத (Unreserved) பொதுத் டிக்கெட்டுகளை டிஜிட்டல் முறையில் வாங்கும் பயணிகளுக்கு ஜூலை 14 வரை 3% வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது.
தள்ளுபடி சலுகையின் விவரம்
இந்த சலுகை குறுகிய காலத்திற்கு மட்டுமே வழங்கப்படுவதாக ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது. உதாரணமாக, ₹100 மதிப்புள்ள டிக்கெட்டை RailOne செயலி மூலம் முன்பதிவு செய்தால், 3% தள்ளுபடியுடன் ₹97 ஆக கிடைக்கும். மேலும், R-Wallet மூலம் பணம் செலுத்தினால் கூடுதலாக 3% கேஷ்பேக் பெறும் வாய்ப்பும் உள்ளது.
சலுகையை பெறுவது எப்படி?
வடக்கு ரயில்வே வெளியிட்ட தகவலின்படி, இந்த தள்ளுபடியைப் பெற பயணிகள், RailOne செயலியை பதிவிறக்கம் செய்ய வேண்டும். முன்பதிவு செய்யப்படாத டிக்கெட்டுகளை செயலி மூலம் புக் செய்ய வேண்டும். டிஜிட்டல் முறையில் பணம் செலுத்த வேண்டும்.
ரயில் ஒன் செயலியின் அம்சங்கள்
இந்தியன் ரயில்வே அறிமுகப்படுத்திய ரயில் ஒன் செயலி, பயணிகளின் வசதியை மேம்படுத்த பல சேவைகளை ஒரே தளத்தில் வழங்குகிறது
- முன்பதிவு செய்யப்பட்ட மற்றும் செய்யப்படாத டிக்கெட் பதிவு
- பிளாட்பார்ம் டிக்கெட் முன்பதிவு
- நேரடி ரயில் கண்காணிப்பு, தாமத தகவல்கள்
- பிளாட்பார்ம் எண் மற்றும் பெட்டியின் நிலை தகவல்கள்
- ஈ-கேட்டரிங் மூலம் உணவு விநியோகம்
- Rail Madad மூலம் புகார் பதிவு மற்றும் கண்காணிப்பு
- பயோமெட்ரிக் உள்நுழைவு (கைரேகை, முகஅங்கீகாரம்)
- டிஜிட்டல் பரிவர்த்தனைக்கு ஊக்கம்
முன்னர் பயன்படுத்தப்பட்ட UTS செயலிக்கு மாற்றாக அறிமுகமான இந்த புதிய செயலி, பணமில்லா பரிவர்த்தனையை ஊக்குவிக்கும் நோக்கத்துடன் வடிவமைக்கப்பட்டுள்ளது.
ரயில் பயணத்தை எளிமையாகவும், வேகமாகவும், வசதியாகவும் மாற்றும் முயற்சியாக இந்த சலுகை அறிவிக்கப்பட்டுள்ளதாக இந்தியன் ரயில்வே தெரிவித்துள்ளது. தினசரி ரயில் பயணம் செய்பவர்களுக்கு இந்த திட்டம் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் எனவும் கூறப்பட்டுள்ளது.
