மத்திய கிழக்கில் அதிகரித்துள்ள போர் பதற்றம் காரணமாக உலகளவில் கச்சா எண்ணெய் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. குறிப்பாக ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் மேற்கொண்ட தாக்குதல்கள் காரணமாக எண்ணெய் சந்தையில் பெரும் அதிர்வு ஏற்பட்டுள்ளது. இதன் விளைவாக ஒரு பீப்பாய் கச்சா எண்ணெய் விலை 60 டாலரில் இருந்து 100 டாலரை கடந்துள்ளது.
நடப்பு சிக்கல்கள்
இந்த உயர்வு நேரடியாக விமான டர்பைன் எரிபொருள் (ATF) விலையையும் பாதித்துள்ளது. இதனால் இந்திய விமான துறையில் செயல்பாட்டு செலவுகள் கணிசமாக அதிகரித்துள்ளன. விமான நிறுவனங்களின் தகவலின்படி, மொத்த செயல்பாட்டு செலவில் சுமார் 40% வரை எரிபொருளுக்கே செலவாகிறது.
மேலும், வான்வழி கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்பட்டதால், விமானங்கள் வழக்கத்தை விட நீண்ட தூரம் பயணிக்க வேண்டிய நிலை உருவாகியுள்ளது. இது எரிபொருள் நுகர்வை மேலும் அதிகரித்து, நிறுவனங்களின் செலவினத்தை உயர்த்தியுள்ளது.
விமான நிறுவங்களின் கோரிக்கை
இந்த சூழ்நிலையில், ஏர் இந்தியா , இண்டிகோ மற்றும் ஸ்பைஸ் ஜெட் உள்ளிட்ட முன்னணி விமான நிறுவனங்கள், விமான போக்குவரத்து அமைச்சகத்துக்கு கடிதம் எழுதியுள்ளன. அதில், சர்வதேச சூழ்நிலைகள் மற்றும் ரூபாய் மதிப்பு சரிவு காரணமாக செயல்பாட்டு செலவுகள் அதிகரித்துள்ளதாகவும், எரிபொருள் விலை உயர்வு இதை மேலும் மோசமாக்கியுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
எரிபொருளுக்கான வரி
விமான எரிபொருளுக்கான மதிப்பு கூட்டு வரி (VAT) மாநிலங்களுக்கு மாறுபடுகிறது. டெல்லியில் இது 25% ஆகவும், தமிழ் நாட்டில் அதிகபட்சமாக 29% ஆகவும் உள்ளது. அதேசமயம் மும்பை , பெங்களூரு , ஹைதெராபாத் மற்றும் கொல்கத்தா போன்ற நகரங்களில் 16% முதல் 20% வரை உள்ளது.
இதனை கருத்தில் கொண்டு, உள்நாட்டு மற்றும் சர்வதேச விமான சேவைகளுக்கு எரிபொருள் விலை நிர்ணயத்தில் ஒரே மாதிரியான மற்றும் வெளிப்படையான முறையை அமல்படுத்த வேண்டும் என நிறுவனங்கள் கோரிக்கை விடுத்துள்ளன. மேலும், கூட்டு வரி செலுத்துவதற்கான அவகாசம் வழங்கவும், உடனடி நிதி உதவி அறிவிக்கவும் மத்திய அரசை வலியுறுத்தியுள்ளன.
மேலும், விமான எரிபொருளுக்கு விதிக்கப்படும் 11% கலால் வரியும் நிறுவனங்களுக்கு கூடுதல் சுமையாக இருப்பதாகவும், இதனை தற்காலிகமாக ரத்து செய்ய வேண்டும் எனவும் கோரப்பட்டுள்ளது
எரிபொருள் விலை நிலவரம்
தற்போது, உள்நாட்டு விமான சேவைகளுக்கான எரிபொருள் விலை லிட்டருக்கு ₹15 என நிர்ணயிக்கப்பட்டிருந்தாலும், சர்வதேச சேவைகளுக்கு அது ₹73 வரை உயர்ந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன் விளைவாக ஏப்ரல் மாதத்தில் விமான போக்குவரத்து துறைக்கு கணிசமான இழப்புகள் ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
இந்த கடுமையான நிதி நெருக்கடியை சமாளிக்க உடனடி நடவடிக்கைகள் எடுக்கப்படாவிட்டால், விமான சேவைகளை குறைக்க அல்லது முழுமையாக நிறுத்த வேண்டிய சூழ்நிலை உருவாகும் அபாயம் இருப்பதாக விமான நிறுவனங்கள் எச்சரிக்கை விடுத்துள்ளன.
