இந்தியக் காப்பீட்டுத் துறையை உலகளாவிய முதலீட்டாளர்களுக்கு முழுமையாகத் திறந்துவிடும் வகையில், 100% அந்நிய நேரடி முதலீட்டிற்கு (FDI) அனுமதி அளித்து மத்திய அரசு புதிய சட்டத் திருத்தத்தை அமல்படுத்தியுள்ளது. இது குறித்த அதிகாரப்பூர்வ அரசாணையை ஒன்றிய அரசு தற்போது வெளியிட்டுள்ளது.
தானியங்கி முறையில் முதலீடு செய்ய வழிவகை
இந்த புதிய சட்ட நடைமுறையின்படி, வெளிநாட்டு நிறுவனங்கள் இந்தியத் தனியார் காப்பீட்டு நிறுவனங்களில் எவ்வித முன் அனுமதியுமின்றி 'தானியங்கி முறையில்' (Automatic Route) 100 சதவீதம் வரை பங்குகளை வாங்க முடியும். இதன் மூலம் காப்பீட்டுத் துறையில் வெளிநாட்டு மூலதனம் தடையின்றி வருவதற்கான வாய்ப்புகள் அதிகரித்துள்ளன.
எல்.ஐ.சி-யில் நீடிக்கும் கட்டுப்பாடுகள்
தனியார் நிறுவனங்களுக்கு முழு அனுமதி அளிக்கப்பட்டாலும், நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை காப்பீட்டு நிறுவனமான எல்.ஐ.சி-யில் (LIC) மட்டும் அந்நிய முதலீட்டு வரம்பில் மாற்றம் செய்யப்படவில்லை. அங்கு வெளிநாட்டு முதலீடு தற்போதுள்ள 20 சதவீத அளவிலேயே தொடரும் என்று அரசாணையில் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.
