சர்வதேச அளவில் நிலவி வரும் கச்சா எண்ணெய் தட்டுப்பாடு மற்றும் விலை உயர்வு காரணமாக, இந்தியாவில் சமையல் எரிவாயு விநியோகத்தில் சில கட்டுப்பாடுகளை அரசு அமல்படுத்தியுள்ளது. இதன் ஒரு பகுதியாக, சிலிண்டர் முன்பதிவு செய்வதற்கான கால இடைவெளி மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. இனி கிராமப்புற நுகர்வோர் ஒரு சிலிண்டர் பதிவு செய்த பிறகு, அடுத்த பதிவிற்கு 45 நாட்கள் வரை காத்திருக்க வேண்டும். அதேபோல், நகர்ப்புற நுகர்வோருக்கான கால அளவு 21 நாட்களில் இருந்து 25 நாட்களாக அதிகரிக்கப்பட்டுள்ளது. தட்டுப்பாட்டைச் சமாளிக்கவும், முறையற்ற விநியோகத்தைத் தவிர்க்கவும் இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
இதற்கிடையில், இண்டேன் கேஸ் நிறுவனத்தின் வழக்கமான முன்பதிவு எண் தற்காலிகமாகச் செயலிழந்துள்ளதால், நுகர்வோர் சிரமமின்றி சிலிண்டர் பெற 'ஸ்மார்ட் புக்கிங்' என்ற புதிய டிஜிட்டல் முறைகளை அந்நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. வாடிக்கையாளர்கள் இனி 7588888824 என்ற வாட்ஸ்அப் எண் மூலமாகவோ அல்லது இண்டேன் ஆயில் மொபைல் செயலி வழியாகவோ எளிதாகப் பதிவு செய்யலாம். இதுதவிர, 7718955555 என்ற எண்ணுக்கு எஸ்எம்எஸ் அனுப்பியும், 8454955555 என்ற எண்ணுக்கு மிஸ்டு கால் கொடுத்தும் சிலிண்டர்களை முன்பதிவு செய்து கொள்ளும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்த நவீன முறைகள் மூலம் தட்டுப்பாட்டு காலத்திலும் நுகர்வோர் தடையின்றி சிலிண்டர் பெற முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
