ஏசி, ஃப்ரிட்ஜ், வாஷிங் மெஷின், மொபைல் போன், டிவி உள்ளிட்ட சாதனங்களின் விலை கடந்த சில மாதங்களாக தொடர்ந்து உயர்ந்து வரும் நிலையில், இது நான்காவது கட்ட உயர்வாக இருக்கும் என விற்பனையாளர்கள் தெரிவிக்கின்றனர்.
முன்னதாக, ஜனவரி இறுதி முதல் பிப்ரவரி வரை மூலப்பொருட்களின் விலை உயர்வு, ரூபாய் மதிப்பு வீழ்ச்சி மற்றும் உற்பத்திச் செலவுகள் அதிகரித்ததன் விளைவாக முதல் கட்ட விலை உயர்வு அமல்படுத்தப்பட்டது. தொடர்ந்து, மார்ச் இறுதி முதல் ஏப்ரல் தொடக்கம் வரை சரக்கு போக்குவரத்து கட்டண உயர்வு மற்றும் கச்சா எண்ணெய் சார்ந்த பொருட்களின் விலை ஏற்றம் காரணமாக இரண்டாவது மற்றும் மூன்றாவது கட்ட உயர்வுகளும் நடைமுறைக்கு வந்தன.
மீண்டும் உயர்ந்துள்ள விலை
இந்நிலையில், மீண்டும் ஒருமுறை 3% முதல் 5% வரை விலையை உயர்த்த தயாரிப்பாளர்கள் திட்டமிட்டுள்ளதாக சந்தை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. குறிப்பாக மெமரி சிப், பிளாஸ்டிக் போன்ற முக்கிய மூலப்பொருட்களின் விலை அதிகரித்திருப்பதும், சர்வதேச சந்தை மாற்றங்களும் இந்த உயர்விற்கு முக்கிய காரணங்களாகக் கூறப்படுகின்றன.
தேவை அதிகரிப்பு
சில மாதங்களுக்கு முன்பு பல நுகர்வோர் பொருட்களுக்கு GST குறைக்கப்பட்டதைத் தொடர்ந்து வீட்டு உபயோகப் பொருட்களின் தேவை அதிகரித்தது. இதனால் உற்பத்தி நிறுவனங்களுக்கு கூடுதல் அழுத்தம் ஏற்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
மேலும், கோடைக்காலம் தொடங்கியுள்ளதால் ஏசி, ஃப்ரிட்ஜ் போன்ற குளிர்பதன சாதனங்களுக்கு சந்தையில் அதிகமான தேவை உருவாகியுள்ளது. இந்த சூழலில் விலை உயர்வு நேரடியாக நுகர்வோரின் செலவினத்தை பாதிக்கும் என வணிக வட்டாரங்கள் எச்சரிக்கின்றன.
அதிகரித்த செலவு
சர்வதேச மற்றும் உள்நாட்டு பொருளாதார மாற்றங்கள், உற்பத்தி மற்றும் போக்குவரத்து செலவுகள் ஆகியவை நேரடியாக மின்னணு சாதனங்களின் விலையை பாதித்து வருவதாக நிபுணர்கள் கூறுகின்றனர். அதிகரித்த செலவுகளை சமாளிக்க தயாரிப்பு நிறுவனங்கள் அவற்றை நுகர்வோரிடம் மாற்றத் தொடங்கியுள்ளன.
இந்த விலை உயர்வு தமிழ்நாடு மட்டுமின்றி நாடு முழுவதும் தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே மேற்கத்திய போரினால் உயர்ந்துள்ள அத்தியாவசிய பொருட்களின் விலை காரணமாக சிரமப்படும் பொதுமக்களுக்கு, இந்த மின்னணு சாதனங்களின் விலை உயர்வு கூடுதல் பொருளாதார சுமையாக மாறும் என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
