தமிழகத்தின் இரண்டாம் கட்ட நகரங்களில் தகவல் தொழில்நுட்பத் துறையை விரிவுபடுத்தும் நோக்கில், திருநெல்வேலி, விருதுநகர் மற்றும் ஈரோடு ஆகிய மூன்று மாவட்டங்களில் புதிய 'நியோ டைடல் பார்க்' அமைக்கும் பணிகளுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று (வியாழக்கிழமை) அடிக்கல் நாட்டினார். மொத்தம் 117.65 கோடி ரூபாய் மதிப்பீட்டில் உருவாகவுள்ள இந்த ஐடி பூங்காக்கள், அந்தந்தப் பகுதி இளைஞர்களுக்குப் புதிய வேலைவாய்ப்புகளை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளன.
இந்தத் திட்டத்தின் கீழ் திருநெல்வேலி மாவட்டம் ரெட்டியார்பட்டி கிராமம், விருதுநகர் மாவட்டம் கூரைக்குண்டு கிராமம் மற்றும் ஈரோடு மாவட்டம் கங்காபுரம் ஆகிய பகுதிகளில் அதிநவீன வசதிகளுடன் கூடிய தகவல் தொழில்நுட்பக் கட்டடங்கள் கட்டப்பட உள்ளன. தலைமைச் செயலகத்திலிருந்து காணொலிக் காட்சி வாயிலாக இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற முதல்வர், அடிக்கல் நாட்டிப் பணிகளைத் தொடங்கி வைக்கிறார். இதன் மூலம் தகவல் தொழில்நுட்பத் துறையில் நேரடியாக 1,800 பேருக்குப் புதிய வேலைவாய்ப்புகள் உருவாகும் என்பதால், மாவட்ட அளவிலான பொருளாதார வளர்ச்சி மற்றும் தொழில்மயமாக்கல் மேலும் வலுவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
