இந்தியாவின் தங்கம் நுகர்வு பெரும்பாலும் இறக்குமதியைச் சார்ந்தே உள்ள நிலையில், அந்நியச் செலாவணி கையிருப்பை நிலைநிறுத்த மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக, ஓராண்டுக்கு தங்கம் வாங்குவதை தவிர்க்குமாறு பிரதமர் நரேந்திர மோடி அண்மையில் நாட்டு மக்களுக்கு வேண்டுகோள் விடுத்தார். இதனைத் தொடர்ந்து, மே 12-ம் தேதி தங்கம் மற்றும் வெள்ளி மீதான இறக்குமதி வரியை 6 சதவீதத்திலிருந்து 15 சதவீதமாக மத்திய அரசு அதிரடியாக உயர்த்தியது. இந்த வரி உயர்வால் மே 13 அன்று தங்கம் விலை பவுனுக்கு ரூ.5,360 வரை உயர்ந்து சாமானியர்களுக்கு அதிர்ச்சி அளித்தது.
சென்னையில் இன்றைய விலை நிலவரம்
கடந்த சில நாட்களாக ஏற்ற இறக்கங்களுடன் காணப்பட்ட தங்கத்தின் விலை, இன்று (மே 15) சென்னையில் கணிசமாகக் குறைந்துள்ளது. 22 கேரட் ஆபரணத் தங்கம் கிராமுக்கு ரூ.100 குறைந்து ரூ.14,950-க்கும், பவுனுக்கு ரூ.800 குறைந்து ரூ.1,19,600-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இந்த விலை சரிவு நகை வாங்குவோருக்கு சற்றே நிம்மதியை அளித்துள்ளது. வரி உயர்வால் ஏற்பட்ட விலை அதிகரிப்புக்கு மத்தியில், இன்றைய இந்த மாற்றம் சந்தையில் முக்கிய கவனத்தைப் பெற்றுள்ளது.
வெள்ளி விலையிலும் அதிரடி வீழ்ச்சி
தங்கத்தைப் போலவே வெள்ளி விலையும் இன்று பெரும் சரிவைக் கண்டுள்ளது. வெள்ளியின் விலை கிராமுக்கு ரூ.10-ம், கிலோவுக்கு ரூ.10,000-மும் குறைந்துள்ளது. இதன்படி, சென்னையில் இன்று ஒரு கிராம் வெள்ளி ரூ.305-க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.3,05,000-க்கும் விற்பனையாகிறது. இறக்குமதி வரி உயர்வால் கடந்த சில தினங்களாக உச்சத்தில் இருந்த தங்கம் மற்றும் வெள்ளியின் விலை இன்று குறைந்துள்ளதால் சந்தையில் வர்த்தகம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது.
