சர்வதேச அளவில் நிலவும் போர் பதற்றம், கச்சா எண்ணெய் விநியோகத்தில் ஏற்பட்டுள்ள சிக்கல்கள் மற்றும் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு வீழ்ச்சி போன்ற காரணங்களால் தங்கத்தின் விலை தொடர்ந்து ஏறுமுகமாகவே உள்ளது. உலகளவில் தங்கம் இறக்குமதியில் முன்னணியில் உள்ள இந்தியாவில், முதலீட்டாளர்கள் தங்கத்தின் மீது காட்டும் அதீத ஆர்வம் காரணமாகவும் விலை அதிகரித்து வருகிறது. இதன் எதிரொலியாக, இன்று (ஏப்ரல் 4) சென்னையில் தங்கம் விலை புதிய உச்சத்தை எட்டியுள்ளது.
ஆபரணத் தங்கம் மற்றும் வெள்ளி நிலவரம்
சென்னையில் இன்று காலை வர்த்தகம் தொடங்கியவுடன் 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு 100 ரூபாயும், சவரனுக்கு 800 ரூபாயும் அதிரடியாக உயர்ந்துள்ளது. இதன்படி, ஒரு கிராம் தங்கம் 13,950 ரூபாய்க்கும், ஒரு சவரன் 1,11,600 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல், 24 காரட் சொக்கத் தங்கம் ஒரு சவரன் 1,21,744 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தங்கத்தின் விலை உயர்ந்தாலும், வெள்ளி விலையில் இன்று மாற்றமேதுமில்லை. ஒரு கிராம் வெள்ளி 255 ரூபாய்க்கும், ஒரு கிலோ கட்டி வெள்ளி 2,55,000 ரூபாய்க்கும் விற்பனை ஆகிறது.
