மத்திய கிழக்கு நாடுகளில் அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையே போர் தீவிரமடைந்துள்ளதன் எதிரொலியாக, பெங்களூருவில் வணிகப் பயன்பாட்டிற்கான கேஸ் சிலிண்டர் விநியோகம் முற்றிலுமாக முடங்கியுள்ளது. இதன் காரணமாக, இன்று (மார்ச் 10) முதல் நகரில் உள்ள உணவகங்கள் மூடப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக பெங்களூரு உணவக சங்கத் தலைவர் பி.சி. ராவ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
ஈரானின் ஹார்முஸ் ஜலசந்தி மூடப்பட்டதால் கச்சா எண்ணெய் மற்றும் எரிவாயு இறக்குமதி கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அடுத்த 70 நாட்களுக்கு இந்தத் தட்டுப்பாடு நீடிக்க வாய்ப்புள்ளதாக எண்ணெய் நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. எவ்வித முன்னறிவிப்பும் இன்றி விநியோகம் நிறுத்தப்பட்டுள்ளதால், உணவகங்களை நம்பியிருக்கும் மாணவர்கள் மற்றும் முதியவர்கள் உள்ளிட்ட பொதுமக்களின் அன்றாட வாழ்க்கை கேள்விக்குறியாகியுள்ளது.
சர்வதேசச் சந்தையில் நிலவும் பதற்றத்தால் இந்தியாவில் சிலிண்டர் விலையும் கணிசமாக உயர்ந்துள்ளது. வீட்டு உபயோக சிலிண்டர் 60 ரூபாயும், வணிக சிலிண்டர் 114.50 ரூபாயும் விலை அதிகரித்துள்ள சூழலில், விநியோகத் தடையும் சேர்ந்துள்ளது ஹோட்டல் துறையை நிலைகுலையச் செய்துள்ளது.
தற்காலிகமாக உணவகங்கள் மூடப்பட்டால், இந்தத் தொழிலைச் சார்ந்திருக்கும் பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்பதால், மத்திய அரசு மற்றும் மக்கள் பிரதிநிதிகள் உடனடியாகத் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என உணவக சங்கம் வலியுறுத்தியுள்ளது. இந்தத் தட்டுப்பாடு விரைவில் நாடு முழுவதும் பரவ வாய்ப்புள்ளதாக வல்லுநர்கள் கணித்துள்ளதால் மக்கள் மத்தியில் பெரும் கவலை எழுந்துள்ளது.
