உத்தர பிரதேச மாநிலம் அம்ரோகா பகுதியில் பாம்பு கடித்த 14 வயது சிறுவன் ஒருவன், முறையான மருத்துவ சிகிச்சை கிடைக்காததால் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சிறுவனுக்குப் பாம்பு கடித்தவுடன் அவனை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வதற்குப் பதிலாக, அவனது பெற்றோர் ஒரு மந்திரவாதியை நாடியுள்ளனர். அந்த மந்திரவாதி, சிறுவனின் உடலில் உள்ள விஷம் இறங்க வேண்டுமானால் அவனைப் புனித கங்கை நதியில் நீண்ட நேரம் மூழ்கடிக்க வேண்டும் என்று விபரீதமான ஆலோசனையை வழங்கியுள்ளார்.
அதிர்ச்சியை ஏற்படுத்திய வீடியோ
மந்திரவாதியின் பேச்சை அப்படியே நம்பிய உறவினர்கள், சிறுவனை மூங்கில் மிதவையில் கட்டி சுமார் 12 மணி நேரம் கங்கை நதி நீரிலேயே மூழ்கி இருக்குமாறு செய்துள்ளனர். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. நீண்ட நேரம் கடும் குளிரிலும், தண்ணீரிலும் அசைவற்று கிடந்த அந்தச் சிறுவனுக்கு எந்த அற்புதமும் நிகழவில்லை; மாறாக சிகிச்சை கிடைக்காததால் அவன் பரிதாபமாக உயிரிழந்தான். மக்களின் அறியாமையைப் பயன்படுத்தும் போலி மந்திரவாதிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், பாம்பு கடிக்கு மருத்துவமனையே தீர்வு என்ற விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்றும் சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
